Dec 3, 2025 - 09:26 AM -
0
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேற்று (02) மாலை மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதன் போது ஆளுநர் நானாட்டான் பிரதேச செயலத்துக்குட்பட்ட அருகம் குண்று, மடுக்கரை உள்ளிட்ட அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலை குறித்து நேரில் அறிந்துகொண்டார்.
வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடிய ஆளுநர் தேவையான நிவாரண உபகரணங்கள் மற்றும் உடனடி உதவிகளை வேகமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மன்னார் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்க அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என ஆளுநர் அவர்கள் உறுதியளித்தார்.
இந்த விஜயத்தில் மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டனர்.
-மன்னார் நிருபர் லெம்பட்-

