Feb 15, 2026 - 08:05 PM -
0
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் - நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (15) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஈழத்தின் தென்மராட்சிப் பதியில் புகழ் பூத்த திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஆலயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீரால் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
அங்கு 108 லிங்கங்களாக வீற்றிருக்கும் சிவபெருமானைத் தரிசித்து, மக்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்தத் திருத்தலத்தில் 108 சிவலிங்க மூர்த்திகள் நந்தியம் பெருமானுடன் காட்சியளிப்பதுடன், ஆலய முகப்பில் அமைந்துள்ள கருங்கல் தேரிலே சிவலிங்கப் பெருமானும் மாணிக்கவாசகப் பெருமானும் அருள்பாலிக்கும் காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்துகின்றது.
மேலும், ஆலயச் சுவர்களில் திருவாசகப் பாடல்கள் முழுமையாகக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளமை இந்தத் தலத்தின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும். மகா சிவராத்திரியை முன்னிட்டு நாவற்குழிப் பகுதி பக்தர்களின் வருகையினால் களைகட்டியுள்ளது.

