Mar 4, 2026 - 10:45 AM -
0
சர்வதேச அதிக உடல் எடை தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று (04) நடைபெற்றன.
உடல் எடையை கட்டுப்படுத்துவோம் வாழ்வினை காப்போம் என்னும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ;;.உதயகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ருதேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடம் வரையில் சென்று அங்கிருந்து தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு சென்று விழிப்புணர்வு வீதி நாடகம் நடாத்தப்பட்டது.
உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களினால் இந்த வீதி நாடகம் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து ஊர்வலமானது மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வரையில் வருகைதந்தது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்கள்,தாதிய விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் உடல் எடை அதிகரிப்பினால் எதிர்நோக்கப்படும் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றதை காணமுடிந்தது.
இதன்போது உடல் எடை அதிகரிப்பினால் ஏற்படும் நோயிகளின் தாக்கங்கள்,அவற்றினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், தினமும் உடல் எடையினை குறைப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள், மருத்துவமுறைகள் குறித்து அறிவுப்புகள் வழங்கப்பட்ட வகையில் நடைபவனி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
--