Apr 3, 2026 - 10:57 AM -
0
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (02) மாலை பெரிய வியாழன் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் அருந்திய இறுதி இரவு உணவு மற்றும் அவர் நற்கருணையை ஏற்படுத்தியதை நினைவு கூறும் நாளே பெரிய வியாழன் ஆகும்.
பெரிய வியாழன் திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமானது.
இந்தத் திருப்பலியின் முக்கிய அம்சமான பாத்தங்களைக் கழுவும் சடங்கு இடம் பெற்றது. தாழ்மையின் அடையாளமாக இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியதை நினைவுகூரும் வகையில், மன்னார் மறைமாவட்ட ஆயரினால் 12 பேரின் பாதங்களைக் கழுவும் சடங்கு நடைபெற்றது.
அதை தொடர்ந்து இயேசு அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் தனது உடல் மற்றும் இரத்தமாகப் பகிர்ந்தளித்ததன் மூலம் நற்கருணை வழிபாட்டையும், குருத்துவத்தையும் நிறுவிய நாளாக இது கருதப்படுகிறது.
திருப்பலிக்கு பிறகு நற்கருணை பீடத்திலிருந்து மாற்றப்பட்டது.இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் அமைதியான முறையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
பெரிய வாரத்தின் தொடக்க நாளான இத்திருப்பலி, புனித வெள்ளியின் துயர நிகழ்வுகளுக்கு முந்தைய முக்கியமான வழிபாடு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
--
