May 4, 2026 - 09:41 AM -
0
இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனனதின நிகழ்வும் சிறப்பு மலர் வெளியீடும் நேற்று (03) நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்றுப்பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தர் திருவுருவச்சிலையருகே மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.
சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையுடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரசபையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள்,சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் யுவன்ராஜன், மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் மு.செல்வராஜா உட்பட அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஆசிரயர்கள், மாநகரசபையின் பொதுநூலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது திருவுருவச்சிலைக்கு மாலைஅணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது பாடல் பாடப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் இதன்போது இலக்கணம் என்னும் காலாண்டு சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
இதேநேரம் மட்டக்களப்பு கல்லடி - உப்போடையில் மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள அடிகளாரின் சமாதியில் சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினரின் ஒழுங்கமைப்பில் சுவாமி விபுலானந்தரின் 134 ஆவது ஜனன தினம் அனுட்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் உதவி பொறுப்பாளர் சுவாமி உமாதீஸ்வரானந்தா ஜீ மஹராஜ், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை தலைவர் க.பாஸ்கரன், பொதுச் செயலாளர் ச.ஜெயராஜா, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் முத்துக்குமார் செல்வராசா, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அடிகளாரது சமாதியில் மலர் மாலை அணிவித்து, பூக்கள் தூவி, "வெள்ளை நிற மல்லிகையோ" பாடல் பாடி ஜனனதின நிகழ்வு அனுட்டிக்கப்பட்டது.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து நேற்று 134 வருடங்கள் ஆகின்றன, 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார்.
சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத பல செயற்பாடுகளை தனது முயற்சியால் சாதித்து காட்டிய மகான் சுவாமி விபுலானந்த அடிகளார். கல்வி, சமயம் மற்றும் சமூகப்பணிகளில் சுயநலம் இன்றி தன்னை அர்ப்பணித்து சேவை செய்தார்.
மட்டக்களப்பு கல்லடி - உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும்.
தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார்.
கிழக்கிலங்கையில் அவதரித்து உலகின் முதல் தமிழ் பேராசிரியராக உயர்ந்த மாபெரும் ஆளுமையான சுவாமிகள் எமது சமூகம் மேற்கத்தேய கலாசாரத்தில் மூழ்கியபோது அதனை மீட்டெடுத்து நெறிப்படுத்தியவர் என்பதுடன், ஏழைகளின் வாழ்வில் கல்வி எனும் ஒளி ஏற்றிய கலங்கரை விளக்கமாக திகழ்ந்தார்.
--
