Jul 15, 2026 - 03:57 PM -
0
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான வழிகளுக்கூடாகப் புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர், இன்று (15) அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு, கடந்த 10 ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யால ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை, பக்தர்களின் வழிபாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டிருந்தது.
முதியவர்கள், சிறார்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும் கரடுமுரடான பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளனர். வனமுறைப்படி பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள், இன்று ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா இன்று இரவு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இவ்வாண்டிற்கான ஆடி வேல் விழா மங்களகரமாக நிறைவுபெறவுள்ளது.
--
