Aug 28, 2026 - 10:09 AM

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத்தேர்த்திருவிழா இன்று (28) ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலயமானது கதிர்காமத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக்கொண்டதாக ஆலய வரலாறுகள் கூறுகின்றன.
இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது தமிழர்களின் வழிவந்த மரபில் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 19 ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.
பத்து தினங்கள் நடைபெற்றுவரும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சத்தில் தினமும் சுவாமி உள் வீதியுலா, வெளி வீதியுலா நடைபெற்று வருவதுடன் தம்ப பூஜை கொடித்தம்ப பூஜை என்பன நடைபெற்று வருகின்றது.
ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் அரோகரா ஓசையுடன் அடியார்கள் தேரினை இழுத்து வந்த காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
தேர் உற்சவத்தினை தொடர்ந்து பச்சைத்திருவிழா நடைபெற்றதுடன் சுவாமிக்கு பச்சை நீர் இறைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்து கொண்டனர்.
நாளை (29) ஆலயத்தின் தீர்த்த உற்சவம் குருக்கள்மடம் சமுத்திரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--





















