Sep 10, 2026 - 10:39 AM

மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான், பனிச்சையடியில் உள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 அப்பாவி இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று நடைபெற்றது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினரால் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகரசபை உறுப்பினர் ரகுநாதன், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான அருட்தந்தை க.ஜெகதாஸ்,கண்டுமணி லவகுகராசா, எஸ்.சிவயோநாதன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதான ஈகச்சுடர் கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் கிராமங்களை சேர்ந்த உறவுகளை இழந்தவர்களினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் நீதிகோரியும் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவமுகாம் பகுதியில் அகழ்வாய்வு முன்னெடுக்குமாறு கோரியும் மகஜர் ஒன்றும் இதன்போது வாசிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது பெருமளவான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
--

























