Apr 18, 2025 - 11:33 AM -
0
எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளையும் கைபற்றி தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதோடு மோசடிகாரர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் ஒருபோதும் நுவரெலியா மாவட்ட மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
நேற்று (17) மாலை ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி,
ஹட்டன் டிக்கோயா நகரசபை, நோர்வூட் பிரதேச சபை, கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரெலியா மஸ்கெலியா ஆகிய சபைகளில் இதற்கு முன்னர் தலைவர்களாக இருந்தவர்கள் மக்கள் மத்தியில் சென்று இனவாதத்தை தூண்டி தங்களுடைய அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நுவரெலியா மாவட்ட மக்கள் அனைத்து மாற்று கட்சிகளையும் புறந்தள்ளி விட்டு தேசிய மக்கள் சக்தியின் வேளைத்திட்டங்களை கையில் எடுப்பதற்கு மக்கள் தயாராகியுள்ளனர்.
தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய மூவின மக்களுடைய வாக்குகளை பெற்றுக்கொண்டதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அதேபோல் மூன்றில் இரண்டு அதிகாரத்தை கொண்ட பாராளுமன்றத்தை நாங்கள் அமைத்துக்காட்டி இருக்கின்றோம்.
நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் உள்ளூராட்சி சபைகளில் இருந்த தலைவர்கள் களவு பொய் போன்ற மோசடிகளில் ஈடுபட்டவர்கள். மக்கள் மத்தியில் சென்று சிங்கள தலைவர்கள் இனவாதத்தை தூண்டியதாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சபைகளில் இருந்த முன்னாள் தலைவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதுவரை காலமும் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்ததில்லை. இவர்களால் செய்த ஒரே வேலைத்திட்டம் இங்குள்ள நகரசபைகள் மற்றும் பிரதேசசபைகள் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்களை பணத்துக்காக விற்பனை செய்தமையே, அதுமட்டுமின்றி வெளிநபர்களுக்கும் இங்கு பல காணிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
இனவாதத்திலும் மதவாதத்திலும் ஆட்சி செய்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நகரசபையில் காணப்படுகின்ற குப்பை பிரச்சினைகளுக்கு கூட தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாக காணப்பட்டார்கள்.
மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுகொடுப்பதற்காகவே தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை தூண்டி வாக்கு கேட்பதை விட கடந்த காலங்களில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை சுட்டிக்காட்டி வாக்கு கேட்கப்படவேண்டும் என்றார்.
--