Jun 23, 2026 - 01:03 PM -
0
நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையின்படி, மேல் மாகாணமே அதிகளவான பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பகுதி, மஹரகம, பிலியந்தலை, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை, எகொடஉயன மற்றும் கொதடுவ போன்ற பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதிஅவதானமிக்கவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேபோல், கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, சீதுவை, களனி, ராகம, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கட்டான மற்றும் மஹர உள்ளிட்ட பல பகுதிகளின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அவதானப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, ஹொரணை, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வத்துவை, களுத்துறை மற்றும் பாயாகல ஆகிய பகுதிகளின் பிரிவுகள் இதன் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், புத்தளம், பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இந்த அதிஅவதானப் பட்டியலில் அடங்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

