Header Logo

செய்திகள்
அம்பாறை வைத்தியசாலை பெண் இயன்முறை வைத்தியரே காரில் சடலமாக மீட்பு

Jun 18, 2026 - 02:12 PM -

0

அம்பாறை வைத்தியசாலை பெண் இயன்முறை வைத்தியரே காரில் சடலமாக மீட்பு

அம்பாறை வைத்தியசாலையின் இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஒருவரின் சடலம் தெல்தெனிய பகுதியில் உள்ள கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

அவரது காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இதற்கமைய, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இடமொன்றில் கார் ஒன்றுக்குள் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக நேற்று (17) பிற்பகல் 2.00 மணியளவில் தெல்தெனிய பொலிஸாருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது. 

பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, பூட்டப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் சடலம் இருப்பதைக் கவனித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, பொலிஸார் அந்த காரின் கதவை உடைத்து அவரது சடலத்தை வெளியே எடுத்து சோதனையிட்டனர். 

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 

அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். 

அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 

இதேவேளை, தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு அவரது சடலம் குறித்துத் தகவல் வழங்கியவர், உயிரிழந்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கப்படும் நபரே என்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அந்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்காக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நீதவான் விசாரணைக்குப் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு படுகொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


MOST READ

காணொளி
வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

title