Apr 27, 2025 - 10:54 AM -
0
புத்தளம் வேரகல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எவ்வித முன் அறிவித்தலுமின்றி திறக்கப்பட்டமையினால் கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீர்மட்டம் அதிகரித்ததை தொடர்ந்து மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் அடித்து சென்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து தனது நேர்த்திக்கடனுக்காக கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு சென்றிருந்த வேளை குறித்த நபர் மாணிக்க கங்கையில் நீராடி கொண்டிருந்த போதே நீரின் வேகம் அதிகரித்து நீரில் அடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 52 வயதுடைய பழனி லோகேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்ட சடலம் கதிர்காமம் பிரதேச வைத்தியசாலையில் இருந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரீசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக கதிர்காமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--