May 1, 2025 - 04:18 PM -
0
யுத்தம் முடிவடைந்த பின் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட பல இடங்களில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்போவதாக முன்னாள் இருந்த அமைச்சர் தெரிவித்தார். இப்போது வந்துவிடும் என பலவாறு தெரிவித்தார். ஆனால் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த காணி தற்போது பறிபோய் உள்ளது. அது எப்படி பறிபோனது யாரிடம் உள்ளது என்பது தெரிந்தவர்களுக்கு தெரியும். ஆகவே தனியான பல்கலைக்கழகம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை பேரதனை பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்றினை கொட்டகலையில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸிடமுள்ள சீஎல்எப் வளாக கட்டடங்களை தற்காலிகமாக வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எடுக்க வேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
மலையக மக்கள் சக்தியின் மே தினக் கூட்டமும் தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வும் கொட்டகலையில் இன்று 01 ஆம் திகதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த மே தின கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது பிள்ளைகளை பல்கலைகழங்களுக்கு அனுப்பிய 22 பெற்றோர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், குறித்த பிள்ளைகள் பல்கலைக்கழக கல்வியினை தொடர நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டன.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மலையகத்தில் இதுவரை காலமும் உரிமைக்கான அரசியல் தொடரப்படவில்லை வெறும் சலுகை அரசியலேயே முன்னெடுத்துள்ளனர். அப்போது இருந்த தலைவர்களும் சரி இப்போது உள்ள அரசியல் தலைவர்களும் சரி ஏதாவது ஒரு சலுகையினை பெற்றுக்கொடுத்து விட்டு அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். இதனை மலையக அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி அவ்வப்போது வந்த அரசாங்கங்களும் அதனை தான் செய்துள்ளன.
அண்மையில் கூட ஜனாதிபதி தலவாக்கலை வந்து இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் சம்பளத்தினை 1,700 ரூபாவாக உயர்த்துவோம். தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி பெற்றுக்கொடுப்போம் என தெரிவித்தார். யோசித்துப் பாருங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது தோட்ட காணிகளை பிரித்து கொடுக்க முடியுமா? அல்லது வீடு கட்டி கொடுக்க முடியுமா?அல்லது சம்பள பிரச்சினை தான் பேச முடியுமா? இந்த விடயங்களை செய்வதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது.
அண்மையில் இலங்கை ஒரு மரண தண்டனை கைதியை கூட விடுத்தார்கள். அப்படி என்றால் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதா, முடியாது காரணம் தீர்த்தால் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும். பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவே தான் அதனை செய்ய பின்வாங்குகிறார்கள். அதேநேரம் 1992 ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கு என்று இதுவரை தெரியாது அதனை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு அது சட்டரீதியான ஆவணம் என்பதனால் உடனடியாக மாற்றவும் முடியாது. இந்நிலையில் வீடுகட்டும் போதும் அல்லது அபிவிருத்திக்காக காணிகளை பெற்றுக்கொள்ளும் போதும் கம்பனிகளின் இணக்கப்பாட்டுடனேயே செய்ய வேண்டி உள்ளது.
குறிப்பாக இந்தியா வீடு கட்டிக்கொடுகிறது என்றாலும் கூட கம்பனிகளின் அனுமதியினை பெற வேண்டும். இவ்வாறான நிலையில் எப்படி ஜனாதிபதி ஒரு ஏக்கர் காணியினை ஒதுக்குவார் என அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.
இதன் போது மலையக மக்கள் சக்தியின் மேதின பிரகடனம் வெளியிடப்பட்டதுடன் மலையக கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேசத்தில் உள்ள கல்விமான்கள் தொழிலாளர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.