Jul 2, 2025 - 05:53 PM -
0
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், பங்களாதேஷ் விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரச வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 500இற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது.
தீவிர போராட்டம் தொடர்ச்சியாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
பங்களாதேஷின் டாக்கா நகரில் இருந்து, சகோதரியுடன் இராணுவ விமானத்தில் புறப்பட்ட ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரை பங்களாதேஷிடம் திரும்ப ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்நிலையில், பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது. சர்வதேச குற்றங்களுக்கான விசாரணை அமைப்பின் நீதிபதி முகமது குலாம் மோர்டுஜா மஜும்தர் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இதனை விசாரித்தது.
இதில், ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று, இதே வழக்கில் கோபிந்தகஞ்ச் பகுதியை சேர்ந்த ஷகீல் அகண்ட புல்புல் என்பவருக்கு 2 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், அவரை நாடு கடத்த வேண்டும். நீதியின் முன் அவரை கொண்டு வர வேண்டும் என பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசின் தலைவரான பேராசிரியர் முகமது யூனுஸ் முன்பு கூறினார்.
ஹசீனாவுக்கு எதிராக 155 சட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 136 வழக்குகள் படுகொலையுடன் தொடர்புடையவை. அவருக்கு எதிராக, 8 கொலை முயற்சி வழக்குகள், 3 கடத்தல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 7 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவருக்கு இந்த சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.