Aug 13, 2025 - 01:32 PM -
0
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிம் கியோனுக்கு எதிராக பங்குச் சந்தை மோசடி, தேர்தல் தலையீடு, இலஞ்ச முறைப்பாடு உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர் வெளியில் இருந்தால் சாட்சியங்களை கலைக்க நேரிடும் என பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொண்ட சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தது.
தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து பாராளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, ஜனாதிபதி யூன் சுக் இயோல் கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவ அவசர நிலையை அறிவித்தார்.
இராணுவ அவசர நிலைக்கு, நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால், சில மணி நேரங்களில் அந்த உத்தரவு மீளப் பெறப்பட்டது.
இதனிடையே, இராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமமானது என்று யூன் சுக் மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
தென் கொரிய வரலாற்றில் ஜனாதிபதியாக இருப்பவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். இந்த நிலையில், அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.