Sep 1, 2025 - 03:31 PM -
0
இந்தியாவில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி ஒரு பவுன் 75,000 ரூபா மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன்பின்பு கடந்த 21 ஆம் திகதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது.
அந்த வகையில் கடந்த 30 ஆம் திகதி கிராமுக்கு 85 ரூபாவும், பவுனுக்கு 680 ரூபாவும் உயர்ந்து, ஒரு கிராம் 9,620 ரூபாவுக்கும், ஒரு பவுன் 76,960 ரூபாவுக்கும் விற்பனை ஆனது. கடந்த 21 ஆம் திகதியில் இருந்து அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு 390 ரூபாவுக்கும், பவுனுக்கு ரூ.3,120 ரூபாவுக்கும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு 85 ரூபா உயர்ந்து ஒரு கிராம் 9,705 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு 680 ரூபா உயர்ந்து ஒரு பவுன் 77,640 ரூபாவுக்கு விற்பனையாகிறது. இதே ஏறுமுகம் நீடித்தால் தங்கம் ஒரு பவுன் 78,000 ரூபா விரைவில் தொட்டுவிடும்.
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாவுக்கும், கிலோவுக்கு 2,000 ரூபா உயர்ந்து, ஒரு கிராம் 136 ரூபாவுக்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.