கிழக்கு
இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

Sep 3, 2025 - 11:59 AM -

0

இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழப்பு

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளது. 

களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளின் தந்தையான 26 வயதுடைய சந்தரலிங்கம் சுரேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். 

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் மோதியே உயிரிழந்துள்ளார். 

வாகன சாரதியான இவர் களுவன்கேணி பிரதேசத்தில் இருந்து செங்கலடி நகரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றவேளை, புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

இவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்காக புகையிரத சாரதி புகையிரதத்தை பின்னோக்கிச் செலுத்தி ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைத்ததுள்ளார். 

அப்போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதை அடுத்து வைத்தியசாலைக்குச் சென்று பிரேதத்தைப் பார்வையிட்ட பின்னர் மரண விசாரணைகளை மேற்கொண்டார். 

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05