Sep 12, 2025 - 12:33 PM -
0
சென்னையின் ஒரு தனியார் லாட்ஜின் மேலாளருக்கு வந்த அவசர தொலைபேசி அழைப்பு, ஒரு அமைதியான இரவைப் புரட்டிப் போட்டது.
'சார், ரூம் நம்பர் 103 இல் ஒரு பெண் தூக்கில் தொங்கப் போவதாகப் பேசியிருக்காங்க. உடனே போய் பாருங்க!' என்ற பதற்றமான குரல், தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் மணிகண்டனைத் திடுக்கிட வைத்தது.
ஸ்பேர் கீயை எடுத்துக் கொண்டு, படபடப்புடன் அவர் அறை எண் 103 ஐ நோக்கி ஓடினார். கதவைத் திறந்தவுடன் கண்ணெதிரே தெரிந்த காட்சி அவரை உறைய வைத்தது. அறையின் மின்விசிறியில் ஒரு இளம்பெண் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்.
அதிர்ச்சியில் உறைந்த மணிகண்டன் உடனடியாக பொலிஸாருக்கு அழைத்து விவரத்தைத் தெரிவித்தார். சில நிமிடங்களில் பொலிஸார் வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேலாளரிடம் விசாரணை ஆரம்பமானது.
மேலாளரின் வாக்குமூலம்,
"நைட் 11 மணி இருக்கும், சார். ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் லாட்ஜுக்கு வந்தாங்க. முக்கியமான வேலை விஷயம்னு சொன்னாங்க. அவங்க ரெண்டு பேரும் ரூம் 103 இற்க்கு போனாங்க. சில மணி நேரத்துல அந்த இளைஞன் மட்டும் வெளியே கிளம்பிப் போயிட்டான். ஆனா, மறுபடியும் திரும்பி வரல," என்று மணிகண்டன் கூறினார்.
பொலிஸார் இளைஞனின் தொலைபேசி எண்ணையும், ஆதார் அட்டை விவரங்களையும் பெற்றனர். அவனது பெயர் ராபின், சொந்த ஊர் திருவள்ளூர் அருகேயுள்ள கீச்சலம் என்பது தெரிய வந்ததுே
உடனடியாக, பொலிஸார் ராபினின் வீட்டிற்கு விரைந்தனர். ஆனால், அங்கு அவர்களைப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ராபினும் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தான்.
காதல் கதையின் பின்னணி,
விசாரணையில், ராபின் மற்றும் அந்த இளம்பெண்ணான திரிஷாவின் கதை வெளிச்சத்திற்கு வந்தது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ராபின், எலக்ட்ரிசியனாக வேலை பார்த்தவன். ஆனால், போதிய வருமானம் இல்லாததால், சென்னைக்கு வந்து பைக் டாக்ஸி ஓட்டினான்.
அந்த வேலையிலும் திருப்தி இல்லாததால், திருமங்கலத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். அங்குதான் அவனுக்கு அண்ணாநகரைச் சேர்ந்த திரிஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
நட்பாகத் தொடங்கிய அவர்களது உறவு, பின்னர் காதலாக மலர்ந்தது. இரு வீட்டாரும் இந்தக் காதலை ஏற்றுக் கொண்டு, விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியான காதல் பயணம், ஒரு லாட்ஜில் ஒரு துயரமாக முடிந்தது.
லாட்ஜில் நடந்தது என்ன?
விசாரணையில், லாட்ஜில் ராபினுக்கும் திரிஷாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிய வந்தது. கோபத்தில், ராபின் திரிஷாவை அறையில் பூட்டிவிட்டு வெளியேறியதாகக் தெரிவிக்கப்படுகிறது.
திரிஷா, தனது தோழியை அழைத்து, 'ராபினுக்கும் எனக்கும் சண்டை. அவன் என்னை இங்க பூட்டிவிட்டு போய்ட்டான். நான் தூக்கில் தொங்கப் போறேன்' என்று அழுது கூறியிருக்கிறாள்.
தோழி அவளைச் சமாதானப்படுத்த முயன்றும், திரிஷா முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. பின்னர், தோழி மேலாளருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறாள்.அதே நேரம், திரிஷாவின் தோழி ராபினின் தொலைபேசிக்கு அழைத்தபோது, அவனது உறவினர்கள் எடுத்து, திரிஷாவின் தற்கொலை முடிவைப் பற்றி அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராபினின் பெற்றோர், அவனது அறையை உடைத்துப் பார்த்தபோது, அவனும் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தான்.
காதலர்கள் இருவரையும் தற்கொலைக்கான காரணம் என்ன? திரிஷாவை அறையில் பூட்டிவிட்டு ராபின் ஏன் வெளியேறினான்? திரிஷாவின் மரணத்திற்குப் பிறகு ராபின் தற்கொலை செய்து கொண்டானா, அல்லது திரிஷாவைக் கொலை செய்துவிட்டு அவனும் உயிரை மாய்த்துக் கொண்டானா?இருவரது தொலைபேசிகளை கைப்பற்றி, அவற்றில் உள்ள செய்திகள், அழைப்பு விவரங்கள் ஆகியவற்றை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, திரிஷாவா முதலில் உயிரிழந்தாள், ராபினா முதலில் உயிரிழந்தான் என்பது தெளிவாகும். ஒரு மகிழ்ச்சியான காதல் கதையாகத் தொடங்கிய பயணம், எதிர்பாராத விதத்தில் இரு உயிர்களையும் பறித்த துயரத்தில் முடிந்திருக்கிறது. வேப்பேரி லாட்ஜின் அறை எண் 103, இந்த மர்மத்தின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது.
பொலிஸாரின் விசாரணை முடிவு, இந்தக் காதல் ஜோடியின் மரணத்திற்கு பின்னால் உள்ள உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

