Sep 13, 2025 - 01:12 PM -
0
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று (13) திருச்சியில் இருந்து தொடங்கினார்.
ஏற்கனவே விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரு மாநாடுகளை நடத்தி த.வெ.க. கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை அறிவித்தார்.
இதில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். இது தமிழக அரசியல் அரங்கில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்தியது.
இன்று நடைபெற்ற அவரது முதல் மக்கள் சந்திப்பு பிரசார நிகழ்ச்சிக்காக சென்னையில் இருந்து இன்று காலை த.வெ.க. தலைவர் விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தார்.
விமான நிலையத்தில் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய்யை பார்த்ததும் வருங்கால முதல்வர் வாழ்க... தளபதி வாழ்க... என விண்ணதிர முழக்கமிட்டனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட விஜய், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரசார வாகனத்தில் இருந்து கையசைத்தபடி வந்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர், அரியலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
த.வெ.க.வினர் 20 ஆம் திகதி கேட்ட நிலையில் அதே நாளில் தி.மு.க.வினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாற்று இடங்களாக பரிந்துரைக்கப்பட்ட நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகத்திலும் இடவசதி போதாது விஜய் பிரசாரத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

