Sep 17, 2025 - 01:26 PM -
0
இந்தியாவின் டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
நாய்க்கடி தொடர்பாக புதிய விதிகளை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல்முறை ஒரு நாய் மனிதரை கடிக்கும்போது, அது 10 நாட்களுக்கு விலங்குகள் மையத்தில் அடைக்கப்படும். பின் கருத்தடை செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என்றும் இரண்டாவது முறையாக அதே நாய் யாரையாவது கடித்தால், அது ஆயுட்காலம் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
நாய் தூண்டுதலின் அடிப்படையில் மனிதர்களை கடித்ததா? அல்ல எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கடித்ததா? என்பதை கண்டறிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அக்குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு விலங்கு நடத்தை நிபுணர் மற்றும் ஒரு நகராட்சி பிரதிநிதி ஆகியோர் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாராவது நாயைத் தாக்கத் தூண்டுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நாயை தத்தெடுப்பவர்கள், அதை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வதாக ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.