Oct 1, 2025 - 01:57 PM -
0
பகுதிநேர வேலை, அதிக வருமானம் என, சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகள், ஒன்லைன் தங்க வர்த்தகம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல்வேறு பெயர்களில் பணம் சம்பாதிக்க ஆசையைத் தூண்டி மோசடி செய்து ஏமாற்றுகிறார்கள்.
இதனை நம்பி வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் பொதுமக்கள் தங்களின் பணத்தை இழப்பது தொடர் கதையாக இருக்கின்றது.
இந்த நிலையில், இந்தியாவின் நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்குக் கடந்த ஜூன் 26-ம் திகதி அவரது வட்ஸ் அப் எண்ணிற்கு ஒன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு தொடர்பான குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதனை நம்பி அதில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
பின்னர், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலம் அவரைத் தொடர்பு கொண்ட மோசடிக் கும்பல், ஒன்லைன் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளது.
இதனை நம்பிய அந்த நபர், அந்தக் கும்பல் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்கிற்கு ரூ.17,16,985 அனுப்பியுள்ளார்.
10 நாட்களுக்கு மேல் ஆகியும் முதலீடு செய்த பணத்தின் மீதான வட்டித் தொகை எதுவும் வரவில்லை. அடுத்த சில நாட்களில் அதே மோசடிக் கும்பல் மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு, மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் செலுத்தினால் பெரிய லாபத்துடன் முதலீடு செய்த பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.
பணம் கிடைத்தால் போதும் என நம்பிய அவர், மீண்டும் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
இதன் மூலம் அவர் மொத்தம் 22,16,985 ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இரண்டாவதாக முதலீடு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் முதலீடு செய்த பணம் குறித்தும், வட்டித் தொகை குறித்தும் எந்தத் தகவலும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த நபர், நெல்லை மாநகர சைபர் கிரைம் பொலிஸில் முறைப்பாடு அளித்தார்.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமானியின் உத்தரவின் பேரில், சைபர் பிரிவு ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையிலான தனிப்படை பொலிஸார் இவ்வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரித்து வந்தனர்.
காசோலை மூலம் சைபர் கொள்ளையர்கள் பெறப்பட்ட வங்கிக்கணக்கின் உரிமையாளரின் விவரங்களைப் பெற்று, கேரள மாநிலம் மலப்புரத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், அங்குள்ள நகைக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஜிதின், சுவிஸ்குமார் ஆகியோரைச் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் நெல்லையைச் சேர்ந்த நபரிடம் ரூ.22 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் சவுதி அரேபியாவிற்குச் சென்று நகைகள் வாங்கச் சென்று வந்தபோது பல சைபர் கொள்ளையர்களின் தொடர்பு கிடைத்ததால் சைபர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர்.
இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரே வாரத்தில் இதுபோன்ற மோசடிக் கும்பல்களிடம் சிக்கி 3 பேர், ரூ.26.50 லட்சம் பணத்தை இழந்துள்ளனர்.
நெல்லை மாநகரில் இந்த ஆண்டில் இதுவரை ஒன்லைன் மோசடி தொடர்பாக 507 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன. இதில், நெல்லையைச் சேர்ந்தவர்கள் ரூ.5.41 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து 92.91 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதில், 75,84,339 ரூபாய் மதிப்பிலான தொகையை மோசடி நபர்கள் பயன்படுத்த முடியாத வகையில் சைபர் பொலிஸார் முடக்கியுள்ளனர். அதே போல 339 வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகின்றன. மோசடிக் கும்பல்கள் அனைத்தும் முதலில் சிறிய லாபம் கொடுத்து நம்பிக்கை வழங்கி, பின்னர் டெலிகிராம், வட்ஸ் அப் குழுக்கள் மூலம் மூளைச்சலவைகள் செய்து பெரிய தொகையை முதலீடு செய்யத் தூண்டுவது, முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டால் வரி, கமிஷன் எனக்கூறி மேலும் பணம் பறிப்பது எனப் பல தந்திரங்களைக் கையாளுவார்கள்.
இது போன்றவற்றை நம்ப வேண்டாம். அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் லின்குகளை கிளிக் செய்வதையும், செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.