Nov 18, 2025 - 01:35 PM -
0
யாழ். பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கான மாற்று அவயவங்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கொண்ட குழு சென்னை சென்றுள்ளது.
கனேடிய அரசு, கனடா வாழ். இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்று (18) சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை குறித்த 35 பேர் கொண்ட அவயவங்களை இழந்த குழு சென்னை சென்றுள்ளது.
யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் "சென்னை ஸ்பாக் மிண்டா" நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
--

