Nov 25, 2025 - 07:18 PM -
0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதை விடுத்து ஏலவே இருக்கின்ற சட்டங்களை வலுப்படுத்தி பக்கச்சார்பின்றி பொலிஸ் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயல்பாட்டாளருமான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
இன்று (25) அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரவிக்கையில்,
குற்றக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய குற்றங்களுடன் தொடர்புடயவர்கள் எனக் கருதப்படும் சந்தேக நபர்களைத் நீண்ட நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க இந்த அரசாங்கமும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையே பாவிக்கின்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் பல குறைபாடுகளை கொண்டுள்ளது.
பொலிஸ் காவலில் உள்ள நபரின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு சட்டவலுவுள்ள ஆதாரமாக நீதிமன்றுகள் ஏற்கமுடியும் என பயங்கரவாத தடுப்பு சட்ட ஏற்பாடுகள் கூறுகின்றன. அவ்வாறாயின் பொலிஸார் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்தி பெறும் வாக்குமூலம் அவருக்கு எதிரான வலுவான சாட்சியாக மாறுவதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும். ஆகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு அச்சட்டம் நியாயமான வலுவான சர்வதேச தரங்களுக்கமைவான சட்டமாக மாற்றப்பட வேண்டும்.
அதே நேரம் குற்றுக்குழுக்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களையோ அல்லது பாரிய குற்றங்களுடன் தொடர்புடயவர்களையோ நீண்ட காலம் தடுத்து வைத்து விசாரிக்க புதிய சட்டமூலங்களை இயற்றுவதை விடுத்து இருக்கின்ற சட்டங்களைத் திருத்தி இன்னும் வலுப்படுத்த வேண்டும்.
காரணம் ஆங்கிலத்தில் The more corrupt the state, the more numerous the laws என்பார்கள். அதிக சட்டங்களை உருவாக்குவது ஊழல்மோசடிகளையும் அதிகரிக்கச் செய்யும் ஒரு செயல்பாடாகவே சர்வதேச ரீதியில் கருதப்படுகிறது.
More laws create more opportunities for abuse. Officials gain more power to interpret or selectively enforce them. In a healthy state laws are clear, few and fairly applied.
அதாவது சட்டங்கள் அதிகமாக இருந்தால், தவறான பயன்படுத்துதலுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். அதிகாரிகள் அவற்றைத் தங்கள்படி விளக்கவும் அல்லது தேர்ந்தெடுத்து அமல்படுத்தவும் அதிக அதிகாரம் பெறுகின்றனர். ஒரு ஆரோக்கியமான அரசில் சட்டங்கள் தெளிவாகவும், குறைவாகவும், நியாயமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.
அதே வேளை கனடாவின் பிறம்ரன் நகரின் மேயர் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட குழுவினர கொடியை ஏற்றியதன் மூலம் கனடிய criminal code எனப்படும் கனடிய சட்டத்தை மீறியுள்ளார். ஆகவே கனடிய (federal government) கூட்டாட்சி அரசு திரு. பற்றிக பிரவுன் அவர்களைக் கைது செய்து கனடிய சட்டதிட்டங்களின்படி தண்டிக்க வேண்டும் என அவர் கனடா அரசிடம் கோரிக்கை விடுத்தார். அவ்வாறு அவரைத் கைது செய்து தண்டிப்பதன் மூலம் கனடா தனது சொந்த சட்டதிட்டங்களை பக்கச்சார்பின்றி மதிக்கும் ஒரு நாடு என்பதை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
--

