Jan 8, 2026 - 01:55 PM -
0
கொட்டகலை பிரதேச சபை கடந்த 2023 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட பின்னர், தலைவரின் கையொப்பத்தை போலியாக இட்டும், போலியான பதவி முத்திரையைத் தயாரித்தும், சட்டவிரோதமான முறையில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, ரசீதுகளை வழங்கி மோசடி செய்த நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகக் சி.ஐ.டி.யில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
இன்று (08) கொட்டகலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்கள் 2023 இல் கலைக்கப்பட்டிருந்தன. இக்காலப் பகுதியில் கொட்டகலை பிரதேச சபையில் முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
பிரதேச சபையில் பணிபுரிந்த சில நபர்கள் போலியான முறையில் தலைவரின் கையொப்பத்தை இட்டும், பதவி முத்திரையைப் பயன்படுத்தியும், ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்து, அதற்கான ரசீதுகளை வழங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் பதவியில் இல்லாத தலைவருக்கோ அல்லது சபைக்கோ அவப்பெயர் ஏற்படாமல் இருப்பதற்காக, இது தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாரேனும் இருந்தால் முறைப்பாடு செய்யலாம். இது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
--

