Jan 26, 2026 - 09:54 AM -
0
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் போய வசுந்தரா (வயது 34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு வைத்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல், திருமணம் வரை செல்லாமல், இடையிலேயே முறிந்தது.
அந்த வைத்தியர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணும் ஒரு வைத்தியர் தான். கர்னூலில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஆனால், தனது முன்னாள் காதலரை வேறு ஒரு பெண் திருமணம் செய்ததை போய வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை.
பொறாமை அடைந்த அவர், முன்னாள் காதலரை பழிவாங்கவும், தம்பதிகளை பிரிக்கவும் திட்டமிட்டார்.
அதற்காக முன்னாள் காதலரின் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த இரத்தத்தை செலுத்த திட்டமிட்டார்.
அரசு வைத்தியசாலையில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட இரத்தத்தை வாங்கினார். ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதாக பொய் சொல்லி, அதை பெற்றார்.
அந்த இரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.
சம்பவத்தன்று, போய வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, கல்லூரியில் பணி முடிந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தனக்கு தெரிந்தவர்களை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று, பெண் வைத்தியரின் ஸ்கூட்டர் மீது மோதச் செய்தார்.
அவர் நினைத்ததுபோல், பெண் வைத்தியர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல் போய வசுந்தரா நெருங்கினார். ஒரு முச்சக்கரவண்டியை வரவழைத்தார்.
முச்சக்கரவண்டியில் பெண் வைத்தியரை ஏற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி. கலந்த இரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினார். பெண் வைத்தியர் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் போய வசுந்தரா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுபற்றி அவரின் முன்னாள் காதலரான வைத்தியர், கர்னூல் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.