Feb 3, 2026 - 11:54 AM -
0
எதிர்க்கட்சிகள் கூறுவது போல, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதியவர்கள் என்பதும், அவர்களுக்கு அனுபவம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், அவர்கள் குறிப்பிடும் கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது மற்றும் குடும்ப அரசியலை முன்னெடுப்பது போன்ற அனுபவங்கள் எங்களிடம் இல்லை.
ஆயினும், மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும், எந்த முறையில் சேவை செய்ய வேண்டும் என்பது குறித்து, பாராளுமன்றத்திற்குப் புதியவர்களாக இருந்தாலும், தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினரும் அரசியல் வாழ்க்கையில் பல வருட அனுபவங்களைக் கொண்டுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
நேற்று (02) இரவு கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல வருட அனுபவம் கொண்டவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நூறு ரூபாயோ அல்லது அதற்குக் குறைவாகவோதான் அதிகரித்து வழங்கினார்கள். ஆனால், அனுபவமற்றவர்கள் என்று எங்களைக் கூறும் நாங்கள், 400 ரூபாயை உயர்த்தி வழங்கியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், கடந்த காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளுக்குக் காணி உறுதிப்பத்திரங்களை அவர்களால் வழங்க முடியவில்லை. ஆனால், நாங்கள் கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்குக் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
எனவே, யாருக்கு உண்மையான அனுபவம் இருக்கிறது என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். மேலும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றிப் பரவலாகப் பேசப்பட்டாலும், அரசு ஊழியர்களுக்கும் கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு 2025 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட சம்பளம், 2026 ஆம் ஆண்டு அவர்களின் கைகளுக்குக் கிடைத்துள்ளது. இது தொடர்பாக எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை.
ஆகவே, தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளைக் கட்டம் கட்டமாகச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறோம். மக்கள் எம்மோடு இருக்கிறார்கள், நாங்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சித்துக் கொண்டே இருக்கட்டும், நாங்கள் மக்களுக்கான சேவையைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். 'மக்கள் என்றும் எங்கள் பக்கமே' என தெரிவித்தார்.
--

