Feb 10, 2026 - 11:19 AM -
0
பொகவந்தலாவ, கொட்டியாகலை மேல் பிரிவு 05 ஆம் இலக்க தேயிலை மலையில் பன்றிக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் பாரிய சிறுத்தை ஒன்று சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிறுத்தையின் சடலத்தை இனங்கண்ட தோட்ட பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொகவந்தலாவ பொலிஸார் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதேவேளை குறித்த சிறுத்தை உணவு தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கம்பி வலை விரித்த சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுத்தை 04 அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--

