Feb 13, 2026 - 11:01 AM -
0
தேயிலைக் கொழுந்தினைப் பறித்து, கரடுமுரடான கரங்களைத் தொட்டுப்பார்த்து, ஆதங்கத்தோடு தொழிலாளர்களின் நிலையைக் கேட்டறிந்த ஜனாதிபதியை இதுவரை காலத்தில் நாங்கள் கண்டதில்லை. கடந்த காலத்தில் பல போராட்டங்களுக்கும் மத்தியிலேயே எங்களுடைய சம்பள அதிகரிப்பை, அதுவும் சிறிய தொகையை மலையக அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுத்தனர்.
ஆனால், எவ்வித போராட்டமும் இன்றி இன்று 400 ரூபாய் சம்பளத்தை அதிகரித்துத் தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம் என பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதண்டி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சம்பள உயர்வினைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி, தோட்ட ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
லெதண்டி தோட்ட ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இன்று (13) காலை பொங்கல் வைத்து விசேட வழிபாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதன்போது பேசிய தொழிலாளர்கள், "நல்லாட்சி காலத்தில் 50 ரூபாய் தருவதாகக் கூறி, பின்னர் அதைக்கூட கொடுக்காது ஏமாற்றினார்கள். ஆனால் இப்போது போராட்டம், வேலைநிறுத்தம் ஏதுமின்றி 400 ரூபாய் அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், இதுவரை காலமும் யாரும் தேயிலை மலைகளுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து நலன் விசாரித்தது இல்லை. அந்த நிகழ்வைக் காணொளியில் பார்த்து நெகிழ்ந்து போனோம்," எனவும் தெரிவித்தனர்.
--

