Feb 13, 2026 - 01:11 PM -
0
சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தில் விஜயைக் காண ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
ஓமலூர் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தவெக தலைவர் விஜய் வந்த நிலையில், ஏராளமான தொண்டர்கள் சாலையில் காத்திருந்து ஆதரவு தெரிவித்தனர்.
எனினும் சரியாக 12.25 மணிக்குள் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜய் வந்தடைந்தார்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஓமலூர் விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் வளாகத்துக்கு வர அரை மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், மிகச் சரியாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார் விஜய்.
ஏற்கனவே, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே இன்று நடைபெறும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் ஏராளமானோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

