Feb 13, 2026 - 11:56 PM -
0
தன்னைப் பற்றி ஊடகங்களுக்குப் பொய்யான கூற்றுக்களைத் தெரிவிப்பதன் மூலம் பலங்கொட கஸ்ஸப தேரர் எதிர்பார்க்கும் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
தாமோ அல்லது தனது பிரதிநிதி ஒருவரோ பலங்கொட கஸ்ஸப தேரருக்குப் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை என்று பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர், 28 நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தினால் கடந்த 11ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நேற்று (12) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதுடன், அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் தமக்கும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தேரர்களுக்கும் அழைப்பு விடுத்து அழுத்தம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
கஸ்ஸப தேரரின் இந்தக் கூற்று தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, "முசாவாதா வேரமணி சிக்காபதம் சமாதியாமி (பொய் பேசுவதைத் தவிர்த்தல்) என்ற வாசகத்தை எமக்குக் கற்றுக்கொடுப்பவர்களே கௌரவ தேரர்கள்தான். இது ஒரு அப்பட்டமான பொய் என்பது கஸ்ஸப தேரருக்கு நன்றாகத் தெரியும்" எனக் குறிப்பிட்டார்.

