Feb 14, 2026 - 03:54 PM -
0
தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினர்.
முறைமாமன் படத்தில் பணியாற்றியபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்து, பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இருவரும் தற்போது படிப்பை முடித்து விட்டனர்.
இதில் அவந்திகா சினிமாவில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வந்த நிலையில் சுந்தர்சியே தனது படத்தில் அறிமுகப்படுத்துவாரா அல்லது தமிழில் வேறு பிரபல இயக்குனர் டைரக்சனில் அறிமுகம் செய்யப்படுவாரா என்கிற கேள்வி நீண்ட நாட்களாகவே ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்பாராத ஆச்சரியமாக அவந்திகா முதன்முதலாக மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த படத்திற்கு ஆரம்பம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவந்திகாவின் முதல் படம் என்பதால் பொருத்தமான பெயர் என்பதுடன் தமிழில் அஜித் நடித்த படத்தின் டைட்டில் இதுவாகும்.
நடிகை சரிதா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சுதேஷ் ஆனி ஈப்பன் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. மலையாளம் மற்றும் தமிழில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரும் தற்போது வௌியாகியுள்ளது.

