செய்திகள்
யுத்தம் முடிந்தாலும் மக்களின் உள்ளங்களில் இன்னும் அமைதி பிறக்கவில்லை

Feb 15, 2026 - 11:05 PM -

0

யுத்தம் முடிந்தாலும் மக்களின் உள்ளங்களில் இன்னும் அமைதி பிறக்கவில்லை

நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட வருடங்களாகின்ற போதிலும், மக்களின் உள்ளங்களில் இன்னும் அமைதி ஏற்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

குறிப்பாக, தங்கள் குடும்பங்களுக்கு என்ன நேர்ந்தது என்று கூடத் தெரியாமல் தவிக்கும் பெண்கள் இன்னும் நம்மிடையே இருக்கிறார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். 

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் இன்று (15) இடம்பெற்ற மகளிர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "நாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்கள் உள்ளனர். இது ஒரு பலமிக்க சக்தியாக இருந்தபோதிலும், நடைமுறையில் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அந்தச் சக்தி பெண்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

யுத்தம் மற்றும் வன்முறைகள் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் நம்பாத, பிளவுபட்ட சமூகமாக மாறினோம். இதன் பாதிப்புகளை பெண்களே அதிகம் அனுபவிக்கின்றனர். 

எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் சம உரிமையுடனும் வாழவே விரும்புகின்றனர். 

ஆனால், சில இனவாத முகாம்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க முயல்கின்றன. 

அவர்களுக்குத் தேவை சாமானிய மக்களின் ஜனநாயகமோ அல்லது சட்டத்தின் ஆட்சியோ அல்ல, மாறாகத் தங்களின் அதிகாரம் மட்டுமே. 

2022 இல் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டுக்குள் திருட்டு, ஊழல் மற்றும் வீண் விரயங்களைத் தடுத்து பொருளாதாரத்தை வலுப்படுத்த எமது அரசால் முடிந்துள்ளது. 

இதன் காரணமாகவே, அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி பாதிப்பின் போது யாரிடமும் கடன் பெறாமல் மக்களுக்கு உதவ முடிந்தது. 

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மில்கோ (Milko) நிறுவனத்தின் இலாபத்தைப் பால் பண்ணையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்துள்ளது. நஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 

எமது எதிர்கால சந்ததியினரை அழிக்கும் விஷத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். 

கடந்த காலங்களில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொலிஸார் மற்றும் நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குவதற்குத் தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஐந்து வருடங்களின் பின்னர், இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஆசிரியர் மற்றும் அதிபர் காலியிடங்கள் முறையாக நிரப்பப்படும். 

பாடசாலைகளுக்கிடையிலான பாகுபாடுகளைக் களைந்து, ஒவ்வொரு பிரிவிலும் தரமான பாடசாலைகளை உருவாக்கி வருகிறோம். 

அனைத்து உயர்தரப் பாடசாலைகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை (Smart Classrooms) அமைக்கும் பணி நடைபெற்று வருவதுடன், புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வி வழங்கப்படவுள்ளது. 

ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல பெண்கள் முன்வர வேண்டும். இனவாதத்தைத் தூண்டி நாட்டைப் பின்னோக்கி கொண்டு செல்ல முற்படும் சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது," என பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05