Feb 16, 2026 - 10:54 AM -
0
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகே அம்பேத்கர் நகரில் புக்கியா என்ற கிராமத்தில் நவஜீவன் என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 5 ஆம் திகதி பிரியங்கா என்ற 28 வயது பெண், பிரசவத்திற்காக இந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு யோகேஷ் வர்மா (32) என்ற பி.ஏ. பட்டதாரியும் சுப்ளம் விஸ்வகர்மா (19) என்ற 12 ஆம் வகுப்பு மாணவரும் சேர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் பிரியங்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியங்காவிற்கு அதீத இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் லக்னோவில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நவஜீவன் கிளினிக் கடந்த 5 ஆண்டுகளாக உரிய அனுமதி அல்லது பதிவு இன்றி இயங்கி வந்தது அம்பலமாகியுள்ளது. தற்போது அந்த வைத்தியசாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
யோகேஷ் மற்றும் சுப்ளம் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். யோகேஷின் தந்தை ஓய்வுபெற்ற வைத்திய ஊழியார் என்பதால், அவரிடம் உதவியாளராக இருந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு யோகேஷ் இது போன்ற சிகிச்சைகளைச் செய்து வந்துள்ளார்.
வைத்தியசாலையை நடத்தி வந்த ரூபி என்ற பெண் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

