Feb 19, 2026 - 08:24 PM -
0
டித்வா புயல் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இதனால் ஹட்டன் புகையிரத நிலையம் கடந்த 84 நாட்களாக ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.
இந்த புகையிரத நிலையத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட அன்றாடம் புகையிரதத்தினை பயன்படுத்தும் ஆயிரம் கணக்கானோர் வருவது வழமை.
ஹட்டன் ஊடாக கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 14 புகையிரத சேவைகள் இடம்பெற்றதாகவும் அந்த சேவைகள் இடம்பெறாமையினால் பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிவனொளிபாதமலை பருவ காலம் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் அதிக யாத்திரியர்கள் புகையிரதங்கள் ஊடாக வருவதனால் யாத்திரியர்களின் வருகையும் குறைந்துள்ளது.
இதனால் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 3 தொடக்கம் 4 லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு மாத்திரம் சுமார் 300 லட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மலையக புகையிரத சேவைகள் முடங்கியுள்ளதனால் பொருட்கள் பறிமாற்ற நடவடிக்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வர்த்தகர்கள் பெரும் நட்டத்தினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாவலபிட்டி முதல் வட்டவளை வரை புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கொட்டகலை வரை நீடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
--

