Feb 23, 2026 - 03:36 PM -
0
இந்தியாவின் கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், சிறார்களின் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. மேலும் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், இந்தியாவிலும் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டு இருந்தார்.
இதன் ஒரு படி மேலே சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, 16 வயதுக்கு உட்பட்டோர் தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்கள் உடனான ஆலோசனையின் போது பேசிய சித்தராமையா, சிறார்கள் தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு சித்தராமையா அறிவுறுத்தியுள்ளார். இதேபோன்று, ஆந்திராவிலும் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நர லோகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

