Mar 4, 2026 - 09:20 AM -
0
மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார் தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து தமது நாட்டுக்கு ஏவப்பட்ட மற்றுமொரு ஏவுகணையை தாம் வெற்றிகரமாக வழிமறித்துள்ளதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தாம் கைது செய்துள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.
கட்டாரில் IRGC சார்பாக செயற்பட்டதாகக் கருதப்படும் இரண்டு குழுக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனமான QNA குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் கட்டாரின் இராணுவ நிலைகளை உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஏனைய மூவரும் ட்ரோன்களைப் பயன்படுத்தி "சதிவேலைகளை" முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முக்கியமான இடங்களின் வரைபடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் என்பனவும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன" என QNA செய்தி வெளியிட்டுள்ளது.