Mar 9, 2026 - 06:11 PM -
0
நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார்.
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (09) நடைபெற்றது.
குறித்த அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் நிந்தவூர் பிரதேச சபையின் நிர்வாகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதிய தவிசாளருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹீர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் காதர் ஆசிரியர், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள், சபையின் செயலாளர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் முன்னாள் தவிசாளராக செயற்பட்ட ஆதம்பாவா அஸ்பரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையை அடுத்து ஏற்பட்ட தவிசாளர் பதவி வெற்றிடத்தை அடுத்து புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் பின்னர் நடைபெற்ற இரு அமர்வுகளிலும் பல காரணிகளால் புதிய தவிசாளர் தெரிவு நடைபெறவில்லை.
அத்துடன் குறித்த பிரதேச சபையில் பல கட்சிகள் கொண்ட உறுப்பினர்கள் இருப்பதால் புதிய தவிசாளராக யாரை தெரிவு செய்வது என்ற விடயத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையின்மை ஏற்பட்ட நிலையில் இரு முறை புதிய தவிசாளருக்கான தெரிவு நடைபெறாது இழுபறியாகி வந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--
