Header Logo

செய்திகள்
சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

Mar 11, 2026 - 09:48 PM -

0

சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக 3 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (11) நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டது. 

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த 25 பக்கங்கள் கொண்ட மேலதிக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

2018 நவம்பர் 29 அன்று வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை. 

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்குச் சுரேஷ் சலே அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

பாணந்துறைப் பகுதியில் உள்ள மற்றுமொரு புலனாய்வாளர் இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறவுள்ளதாக முன்னரே எச்சரித்தும், புலனாய்வுப் பிரிவு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. 

தாக்குதலுக்குப் பின்னர், அந்த புலனாய்வாளர் விடுதலையான போது, சுரேஷ் சலே அவரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் சாரா ஜஸ்மின் என்பவரின் உடல் பாகங்கள் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைகளிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

எனினும், மூன்றாவது முறையும் DNA பரிசோதனை செய்யுமாறு சுரேஷ் சலே விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர். 

சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும் அவர் மலேசியாவில் இருந்தார் எனவும் குறிப்பிட்டார். 

ஏற்கனவே 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது பக்கச்சார்பானது என தெரிவித்தார். 

சுரேஷ் சலே மிகவும் கொடூரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரது மகனைப் பார்க்கக் கூட பொலிஸ் சான்றிதழ் கேட்கப்படுகிறது. சட்டத்தரணிகளுடன் அவர் பேசும் விபரங்கள் இரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இது அடிப்படை உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டினார். 

இந்த விசாரணை அதிகாரிகள் என்ன பேசுகிறார்கள்? அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக இருந்த எனது கட்சிக்காரர், எவ்வாறு பாதுகாப்புச் சபையைக் கூட்டி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? 

அரச புலனாய்வுச் சேவையும் பொலிஸ் மா அதிபரின் கீழேயே இயங்குகின்றது. நீங்கள் குறிப்பிடும் அந்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அக்காலத்தில் சீருடை அணிந்துதானே கடமையாற்றினார்கள்? இது வெட்கக்கேடானது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது இந்த மூன்றாவது சந்தேகநபர் இலங்கையில் இருக்கவே இல்லை. அவர் மலேசியாவில் இருந்தார். அவர் 2018 ஜனவரி மாதமே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டார். 

அதுமட்டுமன்றி, இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 25-க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து முன்னெச்சரிக்கை தகவல் கிடைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் இப்போது யாரோ ஒருவர் புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கியதாகக் கூறுகிறார்கள். 

யார் தகவல் கொடுத்திருந்தாலும், அந்தத் தகவல் கிடைத்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அன்றைய CID அதிகாரிகள் தான் இன்றும் இந்த விசாரணைகளை வழிநடத்துகிறார்கள். அவர்கள் அன்றே தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரானை கைது செய்திருந்தால் இந்த எந்த விசாரணைகளுமே தேவையில்லையே! 

இந்த ஜயகி டி அல்விஸ் அறிக்கையை வாசித்துப் பாருங்கள். இதை வாசித்தால் யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பது புரியும். இவ்வாறானவர்கள் இந்த விசாரணையை முன்னெடுக்கும் போது, இது எவ்வாறு ஒரு பக்கச்சார்பற்ற விசாரணையாக அமைய முடியும்? 

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இசுரு நெத்திகுமார, சுரேஷ் சலே தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நேரடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவை. 

இந்தச் சாட்சிகள் போதுமானதா என்பதை மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்று குறிப்பிட்டார். 

சுரேஷ் சலே தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க மார்ச் 25ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title