Mar 15, 2026 - 10:09 PM -
0
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் திகதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (15) டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
அதன்படி, 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23- ந் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ஆம் திகதி தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6-ஆம் திகதி முடிகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல்7 ஆம் திகதி இடம்பெறுகிறது.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆகும். ஏப்ரல் 23 ஆம் திகதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அன்று காலை 10 மணி முதல் முன்னணி நிலவரமும், மாலை முதல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரமும் தெரியவரும். அன்று இரவே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.
தமிழக சட்டசபை தேர்தல் - ஏப்ரல் 23-ம் திகதி
வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் - மார்ச் 30-ம் திகதி
மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் - ஏப்ரல் 6-ம் திகதி
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை - ஏப்ரல் 7-ம் திகதி
மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் - ஏப்ரல் -9-ம் திகதி
வாக்குப்பதிவு - ஏப்ரல் 23-ம் திகதி
வாக்கு எண்ணிக்கை - மே 4-ம் திகதி
இதேவேளை கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் திகதியும், மேற்கு வங்காளத்தின் தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
