Mar 16, 2026 - 11:32 AM -
0
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சர்வதேச சூழல் இலங்கைக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்.
தற்போது ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. அத்துடன் யேமனுக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் இடைப்பட்ட மற்றுமொரு நீரிணையை ஈரான் மூட நடவடிக்கை எடுத்தால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறான நெருக்கடி நேரங்களில் எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் முறையான தொடர்பைப் பேணுவதும், கையிருப்புகளைச் சரியாக நிர்வகிப்பதும் சிக்கல்களைக் குறைக்க உதவும்.
இலங்கை 100% எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடாகும்.
ஏற்கனவே அனைத்து வகை எரிபொருட்களின் விலையும் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரசாங்கம் தலையிட்டு வரிகளைக் குறைக்க வேண்டும்.
இந்த விலையேற்றத்தின் முழுச் சுமையையும் தொழிலதிபர்கள் மற்றும் நுகர்வோர் மீது சுமத்தாமல், அரசாங்கம் வரிச் சலுகை மூலம் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
