Mar 16, 2026 - 05:40 PM -
0
கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அதனை தமது தேவைக்காக பயன்படுத்திய தரப்பினர் இன்று அரசாங்கத்தின் மீது பொய்பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
வளைகுடா நிலைமையினால் ஆசியாவிலேயே அதிக விலையில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுவரும் நிலையில் மிக குறைந்த விலையில் இலங்கையில் மக்களுக்கு எரிபொருள் வழங்கிவரும் நிலையில் எரிபொருள் பதுக்கல் செயற்பாடுகளை தடுப்பதற்கு கியுஆர் முறை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இதன்மூலம் பதுக்கல் செயற்பாடுகளை தடுக்கும் வகையிலேயே இது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சத்துருக்கொண்டான் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட லங்காபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பேவியன் பார்திலட் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், மண்முனைவடக்கு உதவி பிரதேச செயலாளர் சதா சுதாகரன் ,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உற்பத்தி கிராமத்திற்கான திட்டமுன்மொழிவுகள் அதிதிகளுக்கு வழங்கப்பட்டதுடன் குறித்த கிராமத்தின் பயனாளிகளுக்கான பழமரக்கன்றுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
கிராமிய உற்பத்திகள் மூலம் கிராமங்களின் தேவைகளை நிவர்த்திசெய்து தேசிய பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வின்போது இன்றைய தேசிய நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் தேசத்தினை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் பெயர்ப்பலகையும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம பொது அமைப்புகள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
--
