Mar 17, 2026 - 03:05 PM -
0
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்கள்களை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு:
அனைத்து பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை அனைத்து புதன்கிழமைகளும் பாடசாலை விடுமுறை தினங்களாகக் கருதப்படும். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடுவதற்குத் தேவையான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை வழங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடத்திட்டங்களை மூடிப்பதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால், பாடசாலைகளால் ஏற்பாடு செய்யப்படும் அல்லது வெளி நிறுவனங்களால் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக பாடசாலை நேரத்தைப் பயன்படுத்தக் கூடாது.
பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும் வகையில் நடத்த அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவில் எரிபொருள் செலவிடப்படும் வாகனப் பேரணிகள் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
பாடசாலை கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தல் அல்லது எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள சுற்றுலாக்களில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்தல் ஆகியவை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
