Mar 18, 2026 - 09:45 PM -
0
பிரபல நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனத் தங்களைக் அடையாளப்படுத்தி, அந்த நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்கு விசேட மொபைல் செயலி ஒன்றை நிறுவுமாறு கூறி, மோசடியாளர்கள் முன்னெடுக்கும் இணையவழி நிதி மோசடிகள் குறித்துத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணையம் மற்றும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாகத் தெளிவுபடுத்தி வந்த போதிலும், இது தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரபல நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனக்கூறி, ஒரு செயலியை நிறுவுமாறு உங்களைத் தூண்டுவார்கள். அதனை நிறுவுவதற்கு உதவுவதாகக் கூறி, உங்களது தொலைபேசித் திரையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு (Screen Share) அறிவுறுத்துவார்கள்.
இதன் போது, தொலைபேசித் திரையைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களது தொலைபேசியை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் வசதியை மோசடியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.
அதன் ஊடாக, உங்களது தொலைபேசியிலுள்ள வங்கிச் செயலிகளைப் பயன்படுத்தி, கணக்குகளிலுள்ள பணத்தை மிக நுணுக்கமான முறையில் வேறு கணக்குகளுக்கு மாற்றிக்கொள்கின்றனர்.
தொழில்நுட்பம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையே இவ்வாறான மோசடிகளில் சிக்க முதன்மைக் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதிலிருந்து தப்பிக்கப் பின்வரும் விடயங்களில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு வருமான வழிகள் அல்லது அதிக இலாபம் தரும் முதலீடுகள் தொடர்பான விளம்பரங்கள் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆரம்பத்தில் சிறிய இலாபத்தைக் கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி, பின்னர் பாரிய தொகையை மோசடி செய்வதே இவர்களின் இயல்பாகும்.
வங்கி கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் (Passwords) அல்லது தொலைபேசிக்கு வரும் OTP இலக்கங்களை எக்காரணம் கொண்டும் வேறு நபர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வங்கியோ அல்லது நிறுவனமோ வாடிக்கையாளர்களிடம் தொலைபேசி ஊடாக இவ்வாறான விபரங்களைக் கோருவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் இணைப்புகளை (Links) கிளிக் செய்வதையோ அல்லது அவர்கள் வழங்கும் செயலிகளை (Apps) நிறுவுவதையோ தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, உங்களது தரவுகளை அணுகுவதற்கான அனுமதியை (Access Permissions) கோரும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அறிமுகமில்லாத நபர்களின் அறிவுறுத்தலின் பேரில் உங்களது தொலைபேசித் திரையைப் பகிரும் (Screen Share) செயலைத் தவிர்க்க வேண்டும்.
ஏதேனும் ஒரு காரணத்தினால் நீங்கள் இவ்வாறான நிதி மோசடிக்கு உள்ளானால், முதலாவதாகச் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு அறிவித்து உங்களது கணக்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
