Mar 18, 2026 - 10:16 PM -
0
அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்ட ஈரானிய தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அணியின் ஏனைய உறுப்பினர்களுடன் மீண்டும் ஈரானுக்குத் திரும்பியுள்ளனர்.
மலேசியா மற்றும் ஓமான் ஊடாகப் பயணித்த அவர்கள், இன்று (18) பிற்பகல் துருக்கியிலிருந்து ஈரான் எல்லைக்குள் நுழைந்தபோது விளையாட்டு உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஆசியக் கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டியின் போது, ஈரானிய தேசிய கீதத்தின் போது மௌனம் காத்தமைக்காகத் தங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், அவுஸ்திரேலியாவில் தங்குவதற்குப் பல வீராங்கனைகள் ஆரம்பத்தில் மனிதாபிமான விசாக்களைக் கோரியிருந்தனர்.
எனினும், அவர்கள் அந்த கோரிக்கையினை பின்னர் மீளப் பெற்றிருந்தமையானது பேசு பொருளாக மாறியது.
குறித்த வீராங்கனைகளின் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாகவே அவர்கள் தமது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடு திரும்பிய அவர்கள் சுங்கச் சோதனைகள் மற்றும் கடவுச்சீட்டு நடைமுறைகளை முடித்த பின்னர், அவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
