Mar 19, 2026 - 10:13 AM -
0
இலங்கையில் வருடாந்தம் 8,500 முதல் 9,500 வரையான காசநோயாளிகள் பதிவாவதாக காசநோய் மற்றும் மார்பு நோய் தடுப்பிற்கான தேசிய திட்டம் தெரிவித்துள்ளது.
இவர்களில் சுமார் 45 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சமூக சுகாதார விசேட நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 24 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
"உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் காசநோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக வருடாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டில் 8,726 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 93% பேர் முதன்முறையாக நோய் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களில் 75% பேருக்கு நுரையீரலில் காசநோய் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பக்கூடிய நிலையில் உள்ளனர். புவியியல் ரீதியாக மோதரை, மட்டக்குளி, பொரள்ளை, வனாத்தமுல்ல மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகள் அதிக அவதானம் மிக்க இடங்களாகக் காணப்படுகின்றன."
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தேசிய திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரமிதா சாந்திலதா கருத்து தெரிவிக்கையில்:
"காசநோய் முக்கியமாக சுவாசப் பாதை வழியாகவே பரவுகிறது. நோயாளி ஒருவர் இருமும்போது, தும்மும்போது அல்லது பலமாக சிரிக்கும்போது வெளியேறும் பக்டீரியாக்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவுகிறது. இது நுரையீரலைப் பாதித்து, பின்னர் உடலின் ஏனைய பாகங்களுக்கும் பரவக்கூடும். நோய் தீவிரமடைவதற்கு முன்னரே நோயாளிகளைக் கண்டறிவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்."
