Mar 19, 2026 - 10:16 AM -
0
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் இந்த நடவடிக்கையே முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது 'Truth Social' சமூக ஊடக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ட்ரம்ப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"மத்திய கிழக்கில் நடப்பவற்றால் கோபமடைந்துள்ள இஸ்ரேல், ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எனும் பிரம்மாண்ட எரிவாயு வயல் மீது வன்முறையான தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த முழு அமைப்பில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதிக்கு மாத்திரமே இதனால் சேதம் ஏற்பட்டுள்ளது."
"இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அத்துடன் கட்டார் தேசம் எந்த வகையிலும் இதில் தொடர்புபடவில்லை என்பதுடன், இவ்வாறான ஒன்று நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஈரான் இந்த உண்மைகளை அறியாமல் அநியாயமாக கட்டாரின் எல்.என்.ஜி (LNG) மையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மிகவும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க 'தெற்கு பார்ஸ்' வயல் மீது இஸ்ரேல் இனிமேல் தாக்குதல்களை நடத்தாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
