Mar 24, 2026 - 05:16 PM -
0
இந்தியாவின் விழுப்புரம் மாவட்டம், சின்ன செவலை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (வயது 42) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா (வயது 38) என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கல்லூரி முதல் ஆண்டு படித்து வருகிறான், இளைய மகன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது மனைவி ரேணுகா மீது சந்தேகம் ஏற்பட்டு, அவருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ரேணுகா வேறு ஆணுடன் தொலைபேசியில் பேசுவதாக குற்றச்சாட்டுகளை கோவிந்தன் முன்வைத்து வந்தார்.
உடல்நலம் தேறி வீட்டுக்கு திரும்பிய பின்னரும், மனைவி மீதான சந்தேகம் தொடர்ந்தது. ரேணுகாவை அடித்து துன்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், கோவிந்தன் வேலைக்காக இரண்டு மாதங்களுக்கு வெளியூர் சென்றிருந்தார். அங்கிருந்தபடியே மனைவி மீது மீண்டும் சந்தேகம் ஏற்பட்டு, தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு திரும்பிய கோவிந்தன், ரேணுகாவுடன் திருமணத்திற்கு மீறிய உறவு பற்றிய சந்தேகத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தகராறாக முற்றியது.
அக்கம் பக்கத்தினர் தடுக்க முயன்றபோதும், ஆத்திரம் அடங்காத கோவிந்தன் வீட்டிற்குள் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து, மனைவி ரேணுகாவின் தலையில் வீசி அடித்துக் கொலை செய்தார்.
சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து, கோவிந்தனைப் பிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரேணுகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் சின்ன செவலை மற்றும் சுற்றுப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் சந்தேகத்தால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட பொலிஸார் தரப்பில் கூறியது,
“சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக கோவிந்தன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
