Mar 24, 2026 - 06:19 PM -
0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் அசோக் கராத். இவர் தன்னை ஜோதிடர், எண் கணித நிபுணர், ஹிப்னாடிஸ்ட் மற்றும் கேப்டன் என அழைத்துக் கொண்டு தன்னை நாடி வரும் பெண்களிடம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டது அம்பலமாகியது.
புகார்கள் குவிந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அசோக் கராத் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அசோக் கராத் தன்னிடம் வரும் பெண்களை உணர்வுபூர்வமாக கலங்க வைக்கும் வகையில், கணவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஒரு வித பயத்தை ஏற்படுத்துவார்.
பின்னர் அவர்களுக்கு தேவபாணம் கொடுப்பதாகக் கூறி போதைப் பொருள் கலந்த குளிர்பானங்களை கொடுத்து குடிக்க வைப்பார். அவர்கள் அதைத் குடித்துவிட்டு அரை மயக்கத்தில் இருக்கும்போது, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து தனது வக்கிரத்தை நிறைவேற்றிக் கொள்வார்.
மேலும் கர்ப்பமான பெண்களை கூட விட்டுவைக்காமல் குழந்தை நலமுடன் பிறக்க பூஜை செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அச்சம் காரணமாக வெளியே சொல்ல பயந்து அப்படியே விட்டிருக்கின்றனர். ஆனால் பலநாள் திருடன் ஒரு நாள் சிக்கிக் கொள்வான் என்ற பழமொழிக்கு இணங்க, ஒரு கர்ப்பிணிப் பெண் அளித்த புகாரின்பேரில் அசோக் கராத்தின் அந்தரங்க லீலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
அவர் அளித்துள்ள புகாரில், தனது கணவரை அறைக்கு வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பூஜை என்ற பெயரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொல்லை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு அசோக் கராத் மீது பல்வேறு புகார்கள் குவிய ஆரம்பித்தன. அவர் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி எப்படி அத்துமீறினார் என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.
மூடநம்பிக்கை மற்றும் பயத்தை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி நூற்றுக்கணக்கானோரை தனது வலையில் விழவைத்துள்ளார்.
அசோக்கின் அலுவலகம் அமானுஷ்ய நிறைந்த அறையாக வடிவமைக்கப்பட்டு இருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு அசோக் போதைப் பொருளை பயன்படுத்தி ஹிப்னாடிசம் போன்ற வேலைகளையும் செய்துள்ளார்.
தனது சொல்படி நடந்து கொள்ளாதவர்களிடம் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தி சிலரை தன் கட்டுப்பாட்டிற்குள்ளாகவே வைத்திருக்கிறார்.
அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், பொம்மை பாம்புகள், புலித்தோல்கள் மற்றும் வனவிலங்குகளை வைத்து உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தன்னை நாடி வரும் நபர்களிடம் தோஷநிவர்த்தி எனக் கூறி சாதாரண குங்குமம், மஞ்சள், சந்தனம், மற்றும் ருத்ராட்சம், புளியங்கொட்டை உள்ளிட்டவற்றை கொடுத்து லட்சக்கணக்கில் வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறார். மேலும், தனக்கு தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி, போலி ரத்தினக் கற்களை கொடுத்து பணம் சுருட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும் தன்னை நம்பி வருபவர்களிடம் வசூல் வேட்டையாடியதில் கோடிகளில் பணம் குவிய குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த தகவலும் தெரியவந்துள்ளது. மொத்தம் 150 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்து இருப்பதை அவர்களது பாஸ்போர்ட் காட்டிக் கொடுத்துள்ளது. அசோக் கராத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இந்த வழக்கை அம்பலப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஊழியர் கராத்தின் அலுவலகத்தில் ரகசியமாகக் கேமராவைப் பொருத்தி, பெண்கள் அங்கு வருவதை காணொளியாகப் பதிவுசெய்து அம்பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசோக் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி தேஜஸ்வினி சட்புடே தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வீடியோக்கள் முன்னதாகவே வெளிவந்துள்ளதாகவும், மேலும் பல பெண்கள் பேசத் துணிவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மகராஷ்ராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
