Mar 27, 2026 - 06:22 PM -
0
அமெரிக்காவில் பயனர்களை அடிமையாக்கும் வகையில், சமூக ஊடகங்களை உருவாக்கி இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்திய மதிப்பில் சுமார் 55 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பை அதிக நேரம் பயன்படுத்தியதால், தனது மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், பயனர்களை அதிக நேரம் பயன்படுத்த தூண்டும் வகையில், சில அம்சங்கள் அதில் இருப்பதாகவும் கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இளம்பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் சட்டப்படி பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் சமூக ஊடகங்களில் உள்ள வீடியோக்களால் பயனர்கள் ஈர்க்கப்படவில்லை என்றும், அதனை தொடர்ந்து பயன்படுத்த தூண்டும் வகையில் சில அம்சங்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
குறிப்பாக, முடிவில்லா ஸ்க்ரோலிங் அம்சம், ஒரு வீடியோ முடிந்த உடன், அடுத்த வீடியோவை பார்ப்பதற்கான தூண்டுதல் ஆகியவை சமூக ஊடகங்களுக்கு அடிமையாக்கும் என நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக, மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் சுமார் 55 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில், 70 விழுக்காடு தொகையை மெட்டா நிறுவனமும், 30 சதவிகிதத்தை கூகுள் நிறுவனமும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மெட்டா மற்றும் கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு இருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு எதிரான முக்கிய தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
