Mar 30, 2026 - 10:38 AM -
0
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலரும் செய்யும் ஒரு விஷயம், டீ குடிப்பது. இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால் காலை எழுந்தவுடன் பசி அதிகமாக இருக்கும் என்பதால், இதை நம்மால் தவிர்க்கவும் முடியாது. ஆனால் அதற்காக டீ குடிக்கக் கூடாது. ஏனென்றால் வெறும் வயிற்றில் டீ குடிப்பது நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அப்போ காலையில் என்ன சாப்பிட்டால் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம் என்றுதானே யோசிக்கிறீர்கள்?
அதைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். ஆரோக்கியமான சருமத்துக்கும், சுறுசுறுப்பான மற்றும் மனநிறைவான நாளுக்கும் என்னென்ன உணவுகள் தேவை என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
1) காலை எழுந்தவுடன் 1 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். முடிந்தவரை டீயோ காபியோ காலை குடிக்க வேண்டாம். ஏனெனில் அவற்றிலுள்ள கஃபைன், சரும வறட்சியை ஏற்படுத்தக்கூடும்.
2) தினமும் காலையில் 1 – 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை வெந்நீரில் கலந்து குடிப்பது சருமத்திற்கும் தலைமுடி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. அடிக்கடி வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
3) பிஸ்கட், கேக் போன்ற அதிக கிளைசிமிக் குறியீடு உள்ள உணவுகளை காலையில் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் இவற்றில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் இருக்குமென்பதால் உடலின் இன்சுலின் ஹார்மோன் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் நீரிழிவு பிரச்சனை தொடங்கி, மந்தம், சோர்வு, சரும வறட்சி, சருமச் சுருக்கங்கள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
4) துத்தநாகம் அதிகமிருக்கும் உணவுகளை காலை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை சரும வறட்சியை தடுப்பதற்கும், உடல் நீரேற்றத்தோடு இருப்பதற்கும் உதவும். மேலும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால் பரு போன்ற பல பிரச்சனைகள் தடுக்கப்படும்.
5) காலை உணவுக்கு முன்னர் சாக்லேட், சீஸ், பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் இவை உடலுக்கு கிடைக்கும் ஆற்றலைத் தடுப்பதுடன், கொழுப்பு சேர்வதற்கும் வழிவகுக்கும்.
6) காலை உணவாக பழச்சாறுகள் குடிக்க வேண்டாம். பலரும் ஜூஸ் குடிப்பது நல்லதென நினைப்பதுண்டு. ஆனால் அசல் பலன்கள் நேரடியாக பழத்தை சாப்பிட்டால் மட்டுமே கிடைக்கும். ஜூஸில் சர்க்கரையும் சேர்க்கப்படுவதால், அவை உடலை எளிதில் நீர்ச்சத்து இழப்புக்கு கொண்டு சென்றுவிடும். மேலும் இன்சுலின் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி நாள் முழுக்க சோர்வாக இருக்கச் செய்யும்.
